

புதுடெல்லி,
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியின் மார்பளவு சிலை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்த முயற்சி காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றி, பாரதத் தாய்க்கு ஒப்பற்ற தொண்டுகள் செய்தவர்களை போற்றும் விதமாகவும், இந்தியாவின் கலாசாரத்தை பெருமையுடன் அரவணைக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோக மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் மற்றும் ராஜகோபாலச்சாரியின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.