

மலப்புரம்,
கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாங்கினர். இதற்கு முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த 28 ஆம்தேதி நடைபெற்றது. SB 517026- என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. இந்த டிக்கெட்டை மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியை சேர்ந்த பத்மநாபன் (வயது 51) என்பவர் வாங்கியது தெரியவந்தது.
இவர் கோட்டக்கல் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் (சூப்பர் மார்க்கெட்) ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து பத்மநாபன் கூறும்போது, நான் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவது இல்லை. பம்பர் பரிசு லாட்டரி சீட்டுகளை மட்டும் வாங்குவது வழக்கம். அவ்வாறு வாங்கிய கோடை கால பம்பர் லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்து உள்ளது. இதன் மூலம் அதிர்ஷ்டம் என்னை தேடி வந்துள்ளது. அதற்கு இறைவனுக்கு நன்றி என்றார்.