பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னிலை: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னிலை: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்
Published on

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக மட்டும் தனித்து 70 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மெகா கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் 62 இடங்களிலும் காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களையும் தாண்டி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருவதால், பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாட்னாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com