

புதுடெல்லி,
ஜே.இ.இ. மெயின் தேர்வை 3-வது முறையாக எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதிக்க கோரி மராட்டியத்தைச் சேர்ந்த தேஜஸ் பாபாசகேப் வீர் உள்ளிட்ட 5 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சோனல் ஜெயின் ஆஜராகி, மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வாதிட்டார்.
மற்றொரு வக்கீல் சுமந்த் ஆஜராகி, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வை எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களுக்கு அனுமதி இல்லை என வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். இதில் கோர்ட்டு எப்படி தலையிட முடியும்? இதுதொடர்பாக உரிய அமைப்பிடம் (தலைவர், ஜே.இ.இ. அட்வான்ஸ் அலுவலகம், கரக்பூர், மேற்கு வங்காளம்) முறையிட அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் முறையிடும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கடந்த மார்ச் 15-ந்தேதி பிறப்பித்துள்ள உத்தரவின்படியும், சட்டப்படியும் முடிவெடுக்கலாம். மேலும் மனுக்கள் மீது ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்கு முன்னர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். மனு முடித்துவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.