

புதுடெல்லி,
தென்சென்னை தொகுதி தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில், இந்தியாவில் இந்தி, ஆங்கிலம் தவிர மாநில மொழிகளை வழக்காடு மொழியாக பயன்படுத்தும் ஐகோர்ட்டுகள் பற்றிய விவரம் குறித்தும், ஐகோர்ட்டுகளில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அம்சங்கள் பற்றியும் மற்றும் தமிழை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை மத்திய அரசிடம் முன் வைக்கப்பட்டதா? என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
சென்னை, கொல்கத்தா, கர்நாடகா, சத்தீஷ்கார், குஜராத் ஐகோர்ட்டுகளில் முறையே தமிழ், வங்காளி, கன்னடம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் வழக்காடுவதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு உள்ளன.
இந்த கோரிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவை என்பதால், மந்திரி சபை கூட்ட முடிவின்படி கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மேலும் தமிழச்சி தங்கபாண்டியன், விதி எண் 377-ன் கீழும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டுவதாலும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், எனவே அந்த நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.