மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் - அறிக்கை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு...!

மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வந்த அருண் கோயல் பணியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை விருப்பு ஓய்வு பெற்றார்.
மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் - அறிக்கை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு...!
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி வருகிறார்.

60 வயதான அருண் கோயலின் பதவி காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, பணிக்காலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கங்கிழமை (நவ.21) இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா இடம்பெற்றுள்ள குழுவில் 3-வது நபராக அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட ஆணையை மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது.

மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு? நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக நியமித்ததில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? நியமன நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com