தெலுங்கானாவில் 25 பயணிகளுடன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ்!

தெலுங்கானா மாநிலத்தில் 25 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தெலுங்கானாவில் 25 பயணிகளுடன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ்!
Published on

நகரி,

தெலுங்கானா மாநிலம் கம்பிராவ்பேட்டை-லிங்கன்னபேட்டை இடையே தெலுங்கானா மாநில அரசு பஸ் நேற்று மாலை வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. மண்னேறு ஆற்றின் பாலம் மீது அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் பாலத்தின் மேலே எழும்பிய வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஸ் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. டிரைவரால் அந்த பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியவில்லை.

இதனால் உள்ளே இருந்த பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள் அய்யோ, அம்மா என அச்சத்தில் கதறினர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண பாஸ்கர் தலைமையிலான மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த 25 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் தீயணைப்பு படையினர் மற்றும் மீப்பு குழுவினரால் போராடி பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின்னர் மீட்பு குழுவினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்க முயன்றனர். ஆனால் பல மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி பேருந்து அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மண்னேறு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com