

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு அடிக்கடி பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை தாக்குதல், வாகனங்களில் பொருத்தப்படும் வெடிகுண்டுகள், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் மூலம் டெல்லியில் உள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.