ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் உயிரிழப்பு

பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்
அக்நுர்:
ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். பயங்கரவாதிகளின் இந்த ஊடுருவல் முயற்சியை நமது ராணுவ வீரர்கள் திறம்பட முறியடித்து வருகிறார்கள். இந்த நிலையில், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -
காஷ்மீரில் வனப்பகுதியான கெரி பட்டால் பகுதியில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை ரோந்து பணியில் இருந்து ராணுவத்தினர் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் தாக்குதல் நடத்தினர். இதில்,
பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரர் குல்தீப் சந்த் என்பவர் வீர மரணம் அடைந்தார். பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, அடர் வனப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி இதே பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், 2 வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






