

புதுடெல்லி,
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் நோக்கம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன் நோக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
அதில் உள்ள சில விவரங்கள் பயனற்றவை (எ.கா., சாதி குறித்த கேள்வி), சில தேவையற்றவை - ஏனெனில் அதற்கான தரவுகள் ஏற்கனவே உள்ளன (எ.கா., தடுப்பூசி விவரங்கள்), மற்றும் சில தீய நோக்கம் கொண்டவை (எ.கா., ஒரு நபரின் பெற்றோரின் பெயர்கள், மதம், பிறந்த இடம் போன்றவை)." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் தற்போதைய வடிவத்தில், முன்னரே வரையறுக்கப்பட்ட பட்டியலிலிருந்து (drop-down list) தேர்வு செய்வதற்குப் பதிலாக, விரிவான பதில்களை அளிக்கும் வகையிலான கேள்விகளைப் (open-ended questions) பயன்படுத்த அரசு எடுத்துள்ள முடிவை மிகவும் மோசமான குறைபாடு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.