தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக நாளை முதல் திறப்பு

தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக நாளை முதல் திறப்பு
Published on

ஆக்ரா,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ந்தேதி தாஜ் மஹால் மூடப்பட்டது. கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் நாளை முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தாஜ் மஹால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22ந்தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com