ரெயில் கட்டணம் உயர்வு இல்லை - ரெயில்வே துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ரெயில்வே துறைக்கு ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரெயில் கட்டணம் உயர்வு இல்லை - ரெயில்வே துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு
Published on

புதுடெல்லி,

ரெயில்வே துறைக்கென தனி பட்ஜெட் போடுகிற வழக்கத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. கடைசியாக 2016-17 நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, 2016-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி தாக்கல் செய்தார்.

2017, 2018 ஆண்டுகளில் பொது பட்ஜெட்டுடன் ரெயில் பட்ஜெட் இணைத்தே தாக்கலானது.

இந்த ஆண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்த முறை ரெயில்வே துறைக்கும், நிதித்துறைக்கும் ஒரே மந்திரி பியூஸ் கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்த வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை. இதன்மூலம் ரெயில் பயணிகள் அனைவரும் தப்பித்தனர்.

அதே போன்று சரக்கு கட்டணமும் அதிகரிக்கவில்லை. இது அனைத்து தரப்பினரின் வரவேற்புக்கு உரியதாக அமைந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் ரெயில்வேயில் முதலீட்டு செலவின வகையில் அதிகபட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது ரூ.10 ஆயிரம் கோடி அதிகம்.

2018-19 நிதி ஆண்டு, இந்திய ரெயில்வே துறைக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டாக அமைந்துள்ளது என்ற தகவலை நிதி மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்டார்.

மேலும் ஆள் இல்லாத ரெயில்வே லெவல் கிராசிங்குகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

நடுத்தர அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படும்; சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரெயில்.) இந்த ரெயில் உலகத்தரம் வாய்ந்தது என்ற அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என நிதி மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.

ரெயில்வே துறை தொடர்பாக வெளியிடப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 2019-20 நிதி ஆண்டுக்கான மொத்த வருமானம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 705 கோடியே 68 லட்சமாக இருக்கும்.

* புதிய ரெயில் பாதைகள் அமைப்பதற்கு ரூ.7 ஆயிரத்து 255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்படுகிறது.,

* இரட்டை வழித்தடங்கள் (டபுளிங்) அமைப்பதற்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சமிக்ஞைகள் (சிக்னல்கள்), தொலைதொடர்பு வசதி வகைக்கு ரூ.1,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக ரூ.3 ஆயிரத்து 422 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிதி மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com