

பிண்ட்,
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிண்ட் மாவட்டத்தில் பக்தர்கள் பயணம் செய்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குவாலியரில் இருந்து சிலர் அங்குள்ள கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தனர். பின்னர் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மௌ-மெஹ்கான் சாலையில் அமைந்துள்ள தன்ட்ரௌவா அனுமன் கோயில் அருகே அவர்கள் சென்ற வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அதனைத் தொடர்ந்து வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் குவாலியரைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.