

மும்பை,
மராட்டிய மாநிலம், ராய்காட் மாவட்டம் உம்பரானே வாடி கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் இனத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அந்த கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இதனால் கிராம மக்கள் படுக்கை விரிப்பை பயன்படுத்தி டோலி கட்டினர். பின்னர் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டோலியில் வைத்து 2 பேர் சுமந்து சென்றனர். கரடு முரடான காட்டுப்பாதை வழியாகவும், வழுக்கும் பாறைகள் நிறைந்த ஓடைகள் வழியாகவும் பல கி.மீ தூரம் தூக்கி சென்றனர். ஒரு வழியாக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றடைந்து அப்பெண்ணை சேர்த்தனர். அங்கு அந்தப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உம்பரானே வாடி கிராமம் உள்பட அந்தப்பகுதியில் உள்ள 4 பழங்குடியின கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் இன்று வரை நோயாளிகளை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை, மின்சாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கர்ப்பிணியை டோலி கட்டி சுமந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.