

ஸ்ரீநகர்,
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமென்றாலும் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய முயற்சி செய்யும் என பாதுகாப்பு படைகள் மிகவும் எச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. குபுவாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை முறியடித்தது. குபுவாரா மாவட்டம் தங்தார் செக்டாரில் பால்காதியா நிலையில் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதை பாதுகாப்பு படை கண்டறிந்தது.
எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்தது, சரண் அடையுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் பயங்கரவாதிகள் இந்திய பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர், இந்திய ராணுவமும் பதிலடியை கொடுத்தது. இருதரப்பு இடையேயும் கடும் துப்பாக்கி சண்டை வெடித்தது. இப்போது வரையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இருதரப்பு இடையேயும் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கடைசியாக அங்கிருந்து வந்த தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.
சமீபத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சிதாராமன் குபுவாராவில் எல்லைப் பகுதிக்கு சென்ற பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அதிகமான பனிமூட்டம் ஏற்படுவதற்கு முன்னதாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு ஊடுருவ செய்ய முயற்சி செய்யப்படுகிறது என தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்வதை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையும் குறிப்பிட்டார்.