

போபால்,
மத்திய பிரதேச மாநில வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான அரசு நேற்று வெளியிட்டது. மொத்தம் 10 உறுப்பினர்களை கொண்ட இந்த வாரியத்தில் இப்புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ள இரு இந்து உறுப்பினர்களில், ஒருவர் இந்தூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான மனோஜ் மல்பானி ஆவார். மற்றொருவர் குணா மாவட்டத்தின் ராகோகர் பகுதியை சேர்ந்த அனிமேஷ் பார்கவா. இவர் நிதித்துறையில் பணியாற்றி வருவதுடன், மத்திய பிரதேச பாஜக-வின் ஊடகக் குழு பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கு முந்தைய வக்பு சட்டத்தின்படி, மாநில வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய திருத்த சட்டத்தின்படி, மாநில வக்பு வாரியங்களில் குறைந்தது 2 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்க்க வழிவகை செய்யப்பட்டது. இந்த புதிய சட்ட விதியை நாட்டில் முதன்முறையாக செயல்படுத்திய மாநிலமாக மத்திய பிரதேசம் உருவெடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் வக்பு வாரியத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிப்பதே புதிய வாரியத்தின் முக்கிய சவாலாக இருக்கும். குறிப்பாக, உஜ்ஜைன், விதிஷா, போபால், செஹோர், ராய்சென் மற்றும் ஷாஜாபூர் ஆகிய மாவட்டங்களில் தான் வக்பு சொத்துக்கள் மிக அதிகமாக உள்ளன.
தலைநகர் போபாலில் உள்ள காவல்துறை தலைமையகம், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, காய்கறி சந்தை உள்ளிட்ட 47 அரசு சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரி வருவதால், அது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களும் தற்போது நிலுவையில் உள்ளன. வக்பு வாரிய சொத்துகளின் நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கொண்டு வருவதே இந்த மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.