

புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபைக்குழு நேற்று கூடியது. இந்த கூட்டத் தில் சுமார் ரூ.9,450 கோடி மொத்தச்செலவில் ரெயில்வே அமைச்சகத்தின் 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்கு வங்காள மாநிலம் காரக்பூர் மற்றும் ஒடிசாவின் பத்ரக் (ரனிடால்) இடையே 4-வது வழிப்பாதை (173 கி.மீ.) அமைக்கும் திட்டம், ஒடிசாவின் பத்ரக் ஹரிதாஸ்பூர் இடையே 75 கி.மீ. நீளத்துக்கு 4-வது வழிப்பாதை அமைக்கும் திட்டம், சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திராவின் கூடூர் இடையே 90 கி.மீ. தூரத்துக்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைக்கும் திட்டம்,
ஒடிசாவின் கட்டாக் பரதீப் (படபந்தா) இடையே 72 கி.மீ. தூரத் துக்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைக்கும் திட்டம் ஆகியவையே அந்த திட்டங்கள். இந்த ஒப்புதல்கள் பற்றி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
அப்போது அவர், “இத்திட்டத்தின்படி, அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் விரிவான வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தி, அவர்களை தற்சார்பு (ஆத்மநிர்பர்) அடையச் செய்யும்" என்று கூறினார்.
மேலும், மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்கள், இந்திய ரெயில் வேயின் வலையமைப்பை சுமார் 410 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும் என்றும், சுமார் 60 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 6,448 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.