

பெங்களூரு,
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குகிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாட்டின் வருவாயை பெருக்குவதில் மத்திய அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்துவிட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு ஆதரவாக இல்லை. தடுப்பூசி வினியோகத்திலும் தவறுகள் நடக்கின்றன. நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த விவாதமும் நடைபெறாமல் முடிந்தது. கடந்த முறையும் இதே நிலை தான் உள்ளது.
விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைளை கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.