நீடிக்கும் போர் பதற்றம்... மருத்துவ கட்டமைப்பு குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுல்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியுள்ளது.
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்தியா நேற்று இரவு குண்டுகளை வீசி தாக்கியது. அந்த நாட்டின் 4 போர் விமானங்களையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு குறித்து மத்திய மந்திரி ஜே.பி.நட்டா அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் செயல்பாடு நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.