

பிரயாக்ராஜ்
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அமோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில், கட்டிடம் இடிந்து, சரிந்தது. இந்த சம்பவத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், 6 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறப்படுகிறது. பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் பலியானோர் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள். அமோனியா வாயு கசிவால் பலர் அந்த இடத்திற்கு அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது.
உத்தர பிரதேச அரசு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இதுதவிர கட்டிடம் இடிந்த சம்பவம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.
அமோனியா வாயு தொட்டி வெடித்து கட்டிடம் சரிந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு உள்ளார்.