

மீரட்
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் லிசாரி கேட் பகுதியில் வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதில் வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.
இந்த தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி காவல் துறை கண்காணிப்பாளர் அவினாஷ் பாண்டே கூறும்போது, தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
லிசாரி கேட் பகுதியில் வீட்டில் தீப்பிடித்தது என தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்தவர்களில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எனினும், பெண் ஒருவர் மற்றும் 5 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்து விட்டனர். மற்றொரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மீரட் மாவட்ட மாஜிஸ்திரேட் விஜய் குமார் சிங் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், வீட்டில் இருந்த மின் சாதனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வருகிறது என கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.