

லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் புழுதி புயல் வீசி வருகிறது. நேற்றிரவு 25 மாவட்டங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதில் பாரபங்கி மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கடும் காற்று வீசியதில் சிக்கி காக்ரா ஆற்றில் விழுந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று பரேலி பகுதியில் 8 பேரும், காஸ்கஞ்ச் பகுதியில் 6 பேரும், புலந்த்சாஹர் பகுதியில் 4 பேரும், லகீம்புர் கிரி பகுதியில் 3 பேரும் மற்றும் சஹாரன்பூர், பிரதாப்கார் மற்றும் ஜான்பூர் பகுதிகளில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
இடாவா, கன்னோஜ், சம்பல், அலிகார், காஜியாபாத், கவுதம புத்தா நகர், படான், மிர்சாபுர், மதுரா, முசாபர்நகர் மற்றும் ஷாம்லி ஆகிய பகுதிகளில் ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த புழுதி புயலால் காயமடைந்த 83 பேரில், புலந்த்சாஹர் பகுதியில் 17 பேரும், சஹாரன்பூர் மற்றும் சம்பல் பகுதிகளில் முறையே 14 மற்றும் 13 பேரும் உள்ளனர். இதனால் 121 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 17 விலங்குகளும் உயிரிழந்தன.
கடந்த மே 9ல் உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான புழுதி புயலால் 18 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 27 பேர் காயமடைந்தனர். கடந்த மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 134 பேர் இடி மற்றும் மின்னலால் பலியாகினர். இதில் உத்தர பிரதேசத்தில் அதிக அளவாக 80 பேர் உயிரிழந்தனர்.