

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா 3வது அலை பரவி வரும் நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை பிப்ரவரி 11 தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஜன் சவுபால் திட்டத்தின் மூலம், உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி, முசாபர்நகர், பாக்பத், சஹாரன்பூர் மற்றும் கௌதம் புத் நகர் பகுதி வாக்காளர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் வாக்காளர்களை பா.ஜ.க.விற்கு எதிராக பழிவாங்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியதாவது;-
உத்தரபிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஆனால், மறுமுனையில் எதிர்க்கட்சிகள் பொதுமக்களிடம் பா.ஜ.க.வை பழிவாங்க ஒரு வாய்ப்பு உள்ளதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன. பா.ஜ.க.வை பழிவாங்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், உத்தரபிரதேசத்தில் கடத்தல் மற்றும் மிரட்டல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்கள் மற்றும் வியாபாரிகளை யோகி ஆதித்யநாத்தின் அரசு இந்த நிலைமையிலிருந்து மீட்டுள்ளது.
உத்தரபிரதேச பா.ஜ.க அரசு, மாபியாக்களுக்கும், குண்டர்களுக்கும் சட்டத்தின் அர்த்தத்தை கற்றுக் கொடுத்துள்ளது. குண்டர்கள் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என்று கருதி வந்தனர். அதனால் இந்த குண்டர்கள் எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
தூங்குபவர்கள் தான் கனவு காண்பார்கள். விழித்திருப்பவர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். யோகி எப்போதும் விழித்தே இருப்பவர், அதனால் அவர் தீர்மானங்களை எடுக்கிறார்.
இவ்வாறு பிரதமர் பேசினார். டிஜிட்டல் முறையில் நடைபெற்ற இந்த தேர்தல் பரப்புரையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.