துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.
புதுடெல்லி,
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழக கவர்னரின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






