

டெல்லி,
ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 36 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
நடுக்கடலில் பயணம் செய்தபோது மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். படகு விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணடைய பிரார்த்திக்கிறேன். இந்த விபத்து தொடர்பாக தேவையான உதவிகளை இந்திய தூதரகம் வழங்கும். இந்திய அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.