மணிப்பூரில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை - அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு

போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையை சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை - அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு
Published on

இம்பால்,

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில், கோலென் கிராமத்தை சேர்ந்த 6 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து குக்கி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணிக்கு மோட்பங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

அப்போது போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்ததுடன், அரசு வாகனங்கள் மீது கற்களை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் பலமுறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனிடையே பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்வதை தடுப்பதற்காக, மோட்பங் பகுதியில் கனரக கட்டுமான இயந்திரங்களை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிராமவாசிகள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், போராட்டத்தின்போது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com