ராக்கி கயிறு கட்ட தம்பி வேண்டும்... மகளின் விருப்பத்திற்காக பெற்றோர் செய்த அதிர்ச்சி செயல்

டெல்லியில், ராக்கி கயிறு கட்ட தம்பி வேண்டும் என்ற தங்கள் மகளின் விருப்பத்திற்காக பெற்றோர் அதிர்ச்சிகர விசயங்களை செய்துள்ளனர்.
ராக்கி கயிறு கட்ட தம்பி வேண்டும்... மகளின் விருப்பத்திற்காக பெற்றோர் செய்த அதிர்ச்சி செயல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது, தங்களுடைய சகோதரர்களுக்கு மற்றும் சகோதரர்கள் என நினைக்கும் ஆண்களுக்கு, பெண்கள் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.

இந்த நிலையில், டெல்லியில் ராக்கி கட்ட சகோதரன் வேண்டும் என்ற தங்களுடைய மகளின் விருப்பத்திற்காக பெற்றோர் ஒரு மாத குழந்தையை கடத்திய அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சட்டா ரெயில் சவுக் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் தம்பதி தங்களின் ஒரு மாத குழந்தையை காணவில்லை என புகார் அளித்தனர்.

சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியதில், ஒரு தம்பதி பைக்கில் வந்து குழந்தையை கடத்தியது தெரிய வந்தது. இதில், சஞ்சய் குப்தா (வயது 41) மற்றும் அனிதா குப்தா (வயது 36) ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

டெல்லி தாகூர் கார்டன் நகரில் ரகுபீர் நகர் பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு 17 வயதில் மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு அந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், வரவிருக்கிற ரக்சா பந்தன் பண்டிகையின்போது, ராக்கி கயிறு கட்ட சகோதரன் வேண்டும் என அவர்களின் 15 வயது மகள் தன்னுடைய ஆவலை தெரிவித்திருக்கிறார்.

இதனால், சஞ்சய் தம்பதி கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். சஞ்சய் கடந்த காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார். அவருக்கு எதிராக 3 குற்ற வழக்குகள் உள்ளன. டாட்டூ கலைஞராக சஞ்சய் இருந்து வருகிறார். அவருடைய மனைவி மெகந்தி கலைஞராக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com