போர் பதற்றம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விடுமுறைகள் ரத்து

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, மருத்துவ காரணங்களுக்காக தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் நிலைய விடுப்பு உட்பட எந்த வகையான விடுப்பும் மறு உத்தரவு வரும் வரை வழங்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது என்றும், விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
