மேற்கு வங்காளம்: ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி கொடூர கொலை நினைவாக 2 நிமிடம் மவுன அஞ்சலி

சம்பவத்துடன் பலருக்கு தொடர்பு உள்ளது என்று மாணவியின் பெற்றோர் மற்றும் சக மருத்துவ மாணவிகள் அப்போது கூறினர்.
மேற்கு வங்காளம்:  ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி கொடூர கொலை நினைவாக 2 நிமிடம் மவுன அஞ்சலி
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவ மாணவியின் கொடூர கொலை நினைவாக இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர வகையில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

மவுன அஞ்சலி

சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், அதே நாளான இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவது என முடிவானது. இதன்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, மாநில சுகாதார மற்றும் குடும்ப நல மந்திரியான டாக்டர் ஷரத்வாத் முகர்ஜி மற்றும் மூத்த அதிகாரிகளும் அந்த துறையின் தலைமையகத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பாலியல் பலாத்காரம்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் 31 வயதுடைய முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர், இரவு பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர வகையில் கொலை செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. விசாரணை

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையில் போலீசாரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த கொல்கத்தா ஐகோர்ட்டு, பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதித்து சீல்டா செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த கொடூர சம்பவத்துடன் பலருக்கு தொடர்பு உள்ளது என்று மாணவியின் பெற்றோர் மற்றும் சக மருத்துவ மாணவிகள் அப்போது கூறினர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்நிலையில், மருத்துவ மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத், பா.ஜ.க. சார்பில் பனிஹாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com