ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க 'அனுமதிக்க' அமெரிக்கா யார்..? காங்கிரஸ் கேள்வி

ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க 'அனுமதிக்க' அமெரிக்கா யார்..? காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிடம் இந்த கேள்வியைக் கேட்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி,

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதைகளை ஈரான் தடுத்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “ஜனாதிபதி டிரம்பின் எரிசக்தி நிகழ்ச்சி நிரலின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் தொடர்ந்து பாய உதவும் வகையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு நிதித்துறை தற்காலிகமாக 30 நாட்களுக்கு அனுமதி அளிக்கிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷிய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது, ஏனெனில் அது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது.

இந்தியா அமெரிக்காவின் முக்கியமான பங்காளியாகும், மேலும் அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். இந்த இடைநிறுத்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி பணயக்கைதியாக ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தை தணிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க 'அனுமதிக்க' அமெரிக்கா யார்..? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த உத்தரவை அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்திய அரசாங்கம், இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கலாம், எங்கிருந்து வாங்கக்கூடாது என்பதை அமெரிக்கா இப்போது தீர்மானிக்கும் சூழ்நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது.

இந்த முடிவை பிரதமர் மோடியோ அல்லது இந்திய அரசாங்கமோ எடுக்கவில்லை. இன்று, நாட்டின் குடிமக்கள் கேட்கிறார்கள். இந்தியா எண்ணெய் வாங்க 'அனுமதிக்க' அமெரிக்கா யார்?

நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் அல்ல; நாங்கள் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடு. ஆனால் நரேந்திர மோடி அமெரிக்காவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது, ஏனென்றால் அவர் முற்றிலும் சமரசம் செய்து, அமெரிக்க நலன்களுக்கு நாட்டை அடமானம் வைத்துள்ளார். இது வெட்கக்கேடானது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com