

பேட்டி
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் பெத்த பெருமாள் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வந்த புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்.
பா.ஜனதா கட்சியின் இருமொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். புதுச்சேரியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.
நரேந்திர மோடி அரசு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மின்சாரம், இன்சூரன்ஸ், விமானத்துறை, பெட்ரோலியம், நிலக்கரி சுரங்கம், வங்கிகள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டு அரசாங்கத்தை எவ்வாறு நடத்த முடியும்?.
பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதற்கான காரணமே தனியார்துறை ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான். பொதுத் துறைக்கு காங்கிரஸ் அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போதைய பா.ஜனதா அரசு அதானி, அம்பானிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
சர்வாதிகார ஆட்சி
30 கோடி இஸ்லாமியர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியுமா? இது நடக்குமா? அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லவேண்டும். எங்களுடைய மதச்சார்பற்ற அணி தான் இந்த நாட்டிற்கு பொருந்தும். யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி கவலைப்பட கூடாது என்பதுதான் நரேந்திர மோடி அரசின் தெளிவான கொள்கை.
பிரதமர் காணொலிகாட்சி வழியாக பேசி வருகிறார். இந்த 6 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த பத்திரிகையாளரையாவது சந்தித்து நேரடியாக பேட்டி கொடுத்திருக்கிறாரா? தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார ஆட்சி மத்தியில் தற்போது நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.