பலாப்பழத்துக்குள் வைத்த வெடிகுண்டு வெடித்து காட்டு யானை உயிரிழப்பு - முதியவர் கைது

காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வந்ததால், முதியவர் அதை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உள்ளார்.
பலாப்பழத்துக்குள் வைத்த வெடிகுண்டு வெடித்து காட்டு யானை உயிரிழப்பு - முதியவர் கைது
Published on

கொச்சி,

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழங்குடியின கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்து, அங்கு ஒரு பகுதியில் இருந்த பலாப்பழத்தை ருசி பார்த்தது.

அப்போது பலாப்பழத்திற்குள் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால் யானையின் வாயில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் யானை வலி தாங்க முடியாமல் துடித்தது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த யானை கீழே விழுந்து இறந்தது. தகவல் அறிந்த ஆனைக்குளம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அதன் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. விசாரணையில் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சசீந்திரன் (65 வயது) என்பவர் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வந்ததால், காட்டு யானையை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உள்ளார். பின்னர் யானைக்கு பிடித்தமான பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து, காட்டு யானைக்கு தெரியும் வகையில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

ஊருக்குள் புகுந்த யானை, அந்த பலாப்பழத்தை சாப்பிட்ட போது வெடிகுண்டு வெடித்து இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து சசீந்திரனை வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com