தன்னை கடித்த பாம்பை கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த பெண் - சிகிச்சைக்கு உதவியதாக டாக்டர்கள் பாராட்டு

டப்பாவிற்குள் இருந்த பாம்பைக் கண்டு ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் முதலில் அதிர்ச்சியடைந்தனர்.
தன்னை கடித்த பாம்பை கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த பெண் - சிகிச்சைக்கு உதவியதாக டாக்டர்கள் பாராட்டு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள குரும்பாலி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண், மணிமா நாயக்(வயது 38). இவர் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் கூர்மையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த மணிமா, தன்னை பாம்பு கடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

இருப்பினும் அவர் பதற்றமடையாமல் அந்த பாம்பை தேடத் தொடங்கினார். அது வீட்டிற்குள் இருந்த பாத்திரங்களுக்கு இடையே புகுந்து ஓடியுள்ளது. அந்த பாம்பை லாவகமாக பிடித்த மணிமா, அதனை ஒரு பிளாஸ்டிக் பிஸ்கட் டப்பாவிற்குள் போட்டு அடைத்தார். பின்னர் தனது குடும்பத்தினரை எழுப்பி, அவர்களிடம் நடந்ததை கூறினார்.

அவர்கள் உடனடியாக மணிமாவை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணிமா, தன்னை கடித்த பாம்பையும் கையோடு எடுத்துச் சென்றார். டப்பாவிற்குள் இருந்த பாம்பைக் கண்டு ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் முதலில் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கவும், விஷமுறிவு மருந்தை வழங்கவும் இது டாக்டர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. அந்த பெண்ணின் இந்த துணிச்சலான செயலுக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com