டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது மர்ம திரவம் வீசிய பெண்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது மர்ம திரவம் வீசிய பெண்
Published on

புதுடெல்லி

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது பெண் ஒருவர் மர்ம திரவம் வீசியதில் பரபரப்பு ஏற்பட்டது.

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரை சேர்ந்த அபிஜித் தீப்கே என்ற 30 வயது இளைஞர் ஒருவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவக்கினார். அதில் பல நையாண்டி கருத்துகளை பதிவிட்டார். இதற்கு இளைஞர் வட்டத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சில நாட்களிலேயே பல லட்சம் பேர் அதில் இணைந்தனர். இதன் செயல்பாடுகள் தீவிரம் அடைந்ததால் அந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

சி.பி.எஸ்.இ. தேர்வு டிஜிட்டல் மதிப்பீடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்ற குறைபாடுகளை கரப்பான் பூச்சி அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கூட்டத்தினரிடையே திப்கே இன்று உரையாற்றினார். இந்த நிலையில், அவர் மீது திடீரென்று மை போன்ற மர்ம திரவம் வீசப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உரையை நிறுத்தினார்.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. எனினும், அவர் யாரென்ற விவரமும் எதற்காக அவர் திப்கே மீது திரவம் வீசினார் என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com