

பெங்களூரு
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் தவாங்கரே மாவட்டத்தில் ஹரிஹர் தாலுக்காவில் சுஹைல் (வயது 20) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர் நகரில் வசித்து வந்தவரான அவர், பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக கர்நாடகாவுக்கு வந்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளின் உளவு தகவல்களின் அடிப்படையில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக இணைந்து போலீசாரின் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து முறைப்படி அவர் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடைய மொபைல் போனில் இருந்து வன்முறையை தூண்டும் வகையில் சாட்டிங்குகள் உள்ளிட்ட விசயங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்திய தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்ட பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர் ஒருவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பில் இருந்த 2 பேர் துமகூரு மற்றும் தவாங்கரே மாவட்டத்தில் வைத்து கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கும், இந்த வாலிபருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.