டாக்கா,
வங்காளதேசத்தின் சிட்டஹாங் நகரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்த மாணவர் அதீப் ஷேக் (வயது 25). இவருடன் அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மைஷ்னாம் சிங் (23), ஒரு பெண் மற்றும் ஒருவர் அங்குள்ள அக்பர் ஷா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். 4 பேரும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அதீப் ஷேக்கும், மைஷ்னாம் சிங்கும் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மைஷ்னாம் சிங், அதீப் ஷேக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர், அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது வீட்டில் இருந்த மற்ற 2 பேரும், இருவரையும் மீட்டு சிட்டஹாங் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அதீப் ஷேக் பரிதாபமாக உயிர் இழந்தார். மைஷ்னாம் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, சிட்டஹாங் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.