இரும்பு ஏணி வயரில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி - மகன் கண்முன்னே இறந்த பரிதாபம்

போடி அருகே மரத்தில் ஏறுவதற்கு கொண்டு சென்ற இரும்பு ஏணி மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலியானார்.
Published on

போடி,

போடி குலாலர்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று காலையில் இவர் போடி அருகே மேலப்பரவு புலத்தில் ஒரு தோப்பில் நுங்கு வெட்ட சென்றார். அவருடன் மகன் ரஞ்சித்குமாரும் சென்றார். தோப்பில் இருந்த பனை மரத்தில் ஏறுவதற்கு இரும்பு ஏணியை லட்சுமணன் பயன்படுத்தினார்.

தோப்பில் இருந்த பனை மரத்தில் ஏறி நுங்குகளை அவர் வெட்டினார். பின்னர் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு ஏறுவதற்கு லட்சுமணன் சென்றார். அப்போது இரும்பு ஏணியை அவர் தூக்கி மற்றொரு மரம் உள்ள பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்பகுதியில் இருந்த மின்சார வயரில் இரும்பு ஏணி எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் லட்சுமணன் தூக்கி வீசப்பட்டார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு ரஞ்சித்குமார் அங்கு ஓடி வந்தார். மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி குரங்கணி போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com