

வாஷிங்டன்,
உலகமெங்கும் பிரபலமாகியுள்ள பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் அவர், இணையதள நிறுவனங்கள் மீது அரசுகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இணையதளங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை புதுப்பிப்பதின்மூலம், அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பொது மக்களுக்கும், புதிய விஷயங்களை உருவாக்க தொழில் அதிபர்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீங்கான உள்ளடக்கம், தேர்தல் நேர்மை, தனியுரிமை, தகவல்களை எடுத்துச்செல்லுதல் ஆகிய 4 அம்சங்களிலும் புதிய ஒழுங்குமுறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இணைய தளங்களில் இருந்து தீங்கான உள்ளடக்கம் அனைத்தையும் அகற்றுவது என்பது சாத்தியம் இல்லை. மக்கள் தங்களது சுய கொள்கைகள், செயல்முறைகள் வாயிலாக ஏராளமான பகிர்வு சேவைகளை பயன்படுத்துகிறபோது, எங்களுக்கு இன்னும் அதிகமான தரமான அணுகுமுறை தேவைப்படுகிறது என எழுதி உள்ளார்.