ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை:திட்டமிட்ட செயல் என அகிலேஷ் யாதவ் விமர்சனம்

ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை:திட்டமிட்ட செயல் என அகிலேஷ் யாதவ் விமர்சனம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான். இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணமான ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலீஸ் பிடியில் விகாஸ் துபே சிக்கினான். இதையடுத்து, உத்தர பிரதேச போலீசாரிடம் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான்.

மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்தனர். கான்பூர் வருவதற்கு சில கி.மீட்டர்களே எஞ்சியிருந்த நிலையில், அவர்கள் வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விகாஸ் துபேவை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில், ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவ் கூறுகையில், விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு தனது ரகசியத்தை காப்பாற்றிக்கொள்ள காரை கவிழ்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com