கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி

தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பலனாக ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சிக்கினர். அவர்களை கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி காரிலேயே அவர்களை நேற்று காலையில் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பரிசோதனையில் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது. இந்தநிலையில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் 10 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்ட நிலையில் என்.ஐ.ஏ நீதிமன்றம் 8 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இருவரையும் 21-ம் தேதி வரை காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு சிறப்பு நீதிமன்றம்
அனுமதி வழங்கியது . வழக்கில் தொடர்புடைய பாசில் பரீத்தையும் விசாரிக்க என்ஐஏ தீவிரம் காட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com