

வேலூர்,
வேலூர் கொணவட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநில நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி கொணவட்டம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இந்த நிலையில் வேலூர் மாங்காய்மண்டி முதல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கொணவட்டம் மேம்பாலம் வரை மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நேற்று நடந்தது. முதற்கட்டமாக சாலையையொட்டி இருபுறமும் அளவீடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த இறைச்சி கடைகள், மூங்கில் கடைகள், இரும்பு குடில்கள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டன. மேலும் கடைகளின் முன்பகுதி கூரைகள், சுவர்கள் மற்றும் வீடுகளின் சுற்றுச்சுவர் ஆகியவையும் இடித்து அகற்றப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளின் சுவர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த பணியை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். இதையொட்டி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகளோ, மேற்கூரையோ அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.