கோவில்பட்டி அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மாணவன் பலி - நண்பர் படுகாயம்

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மாணவன் உயிரிழந்தான். அவனுடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சுதாகர் (18). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் சாரதி மகன் ராஜா செல்வமணி (25), சண்முகையா மகன் சாம் பால் (18). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுபாஷ், சுதாகர் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த சுபாஷை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த சுதாகருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் செல்வமணி, சாம் பால் ஆகிய 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில், 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com