

சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் மகன் ராமசாமி(வயது 55), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை சொந்தவேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் சின்னசேலம் வந்தார். பின்னர் அவர் வேலை முடிந்ததும் இரவு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். சின்னசேலம்-கூகையூர் சாலையில் தனியார் டைல்ஸ் விற்பனைக்கடை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, ராமசாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ராமசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சின்னசேலம் அடுத்த தென் சிறுவளூரை சேர்ந்த காளிமுத்து(50) என்பவரை கைது செய்தனர்.