கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வரவேற்போம் மந்திரி டி.கே.சிவக்குமார் சொல்கிறார்

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அதனை வரவேற்போம் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான சிறப்பான பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்வார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அதனை வரவேற்போம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா அவசரப்படுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அரசியலமைப்பு எதிராக செயல்படுபவர்களை எதுவும் செய்ய இயலாது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த திட்டங்களும் இல்லை. வேலை வாய்ப்பு அளிப்பது, புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் ஏற்கனவே விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com