சிறுபான்மையின மக்கள் தொழில் தொடங்க கடன் உதவி

சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர் தொழில் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுகடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம். சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுகடன் பெற குழுவில் குறைந்தபட்சம் 60 சதவீத சிறுபான்மையினர் இருத்தல் அவசியம். இதர 40 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர் இடம் பெறலாம்.

மேற்படி கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், பெரம்பலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com