அமேதி,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் மே 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் எப்போதும் போல பரபரப்பான தேர்தல் பிரசாரங்கள் களை கட்டி வருகின்றன. இந்த நிலையில், அமேதியில் அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டதற்காக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம், ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளதாவது:- அமேதி நகரில் காங்கிரஸ் சார்பில் 7 இடங்களில் பிரசார பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு பேனர், கட்டடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனர்களில், ராகுல் காந்தியின் புகைப்படம், காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்த பேனர்களை வைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியினரால் எந்த அனுமதிச் சான்றையும் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டீஸுக்கு அவர் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அவருடைய பதில் திருப்திகரமாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.