சேலம்,
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வீமனூர் பகுதியை சேர்ந்தவர் தொப்பாகவுண்டர். இவரது மகள் சசிகலா (வயது 40). இவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் பகத்சிங். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கண வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சசிகலா அவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
தொப்பாகவுண்டருக்கும், அவரது மகள் சசிகலாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் வேலை முடிந்து வரும் சசிகலாவை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அந்த வாலிபருடன் சசிகலாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை தொப்பாகவுண்டர் கண்டித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தொப்பாகவுண்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அன்றைய தினம் அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர், தொப்பாகவுண்டரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.
இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலா மற்றும் அவரது நண்பர்களான பெரிய வீராணத்தை சேர்ந்த ராஜா, ஸ்டீபன்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்த தந்தை தொப்பாகவுண்டரை அவரது மகள் சசிகலாவே திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தந்தையை கொலை செய்ததாக நர்சு சசிகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜா, ஸ்டீபன்ராஜ், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.