நோபல் பரிசு பெற்றவர் மரணம்: சீனாவிற்கு மலாலா கண்டனம்

தன்னைப் போன்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியூ ஸியாபோவின் இறப்பு விஷயத்தில் சீன அரசிற்கு கண்டனம் தெரிவித்தார் மலாலா.
Published on

அபுஜா (நைஜீரியா)

மக்களின் சுதந்திரத்தை மறுக்கின்ற எந்தவொரு அரசையும் நான் கண்டிகிறேன் என்றார் மலாலா. தற்போது 20 வயதாகும் மலாலா பாகிஸ்தானில் தாலிபான்களால் தலையில் சுடப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்டார். தாலிபான்கள் கல்வி கற்பதற்கு விதித்தத் தடையை மீறியதால் அவர் சுடப்பட்டார்.

லியூ என்ன செய்தார் என்பதை கற்பதன் மூலம் மக்கள் இணைந்து சுதந்திரத்திற்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் மலாலா.

அவர் தற்போது நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 10.5 மில்லியன் குழந்தைகள் பள்ளியில் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர். மேற்கத்திய கல்வியை கற்பதற்கு தடை விதித்து வன்முறையில் ஈடுபடும் போகோ ஹராம் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தினால் நைஜீரியா பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு கல்விக்கான அரசு செலவும் குறைக்கப்பட்டுள்ளதாக மலாலா கூறினார்.

எதிர்காலத்தை பாதுகாக்க கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் நைஜீரிய அரசிடம் கேட்டுக்கொண்டார்.

போகோ ஹராம் பிரச்சினையால் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com