மதுராந்தகம் அரசு டாக்டர் கொரோனாவுக்கு பலி; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் எஸ்.சுகுமாரன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Published on

சென்னை,

டாக்டர் எஸ்.சுகுமாரன் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி, தனியார் மருத்துவமனையில் 20.6.2020 முதல் 30.6.2020 வரை சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோய் இருந்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30.6.2020 அன்று சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். டாக்டர் சுகுமாரன் இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடன் பணியாற்றிய டாக்டர் சுகுமாரன் குடும்பத்திற்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com