மேற்கு வங்க மாநில நிலவரம் குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

மேற்கு வங்க மாநில நிலவரம் குறித்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
Published on

கொல்கத்தா,

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீஸார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில நிலவரம் குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கேட்டு அறிந்து கொண்டார். தற்போதைய பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மாநில தலைமைச்செயலாளர், டிஐஜி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேசரிநாத் திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com